கண்ணாமூச்சி ரே ரே – 10

(Tamil Kamaveri - Kannamoochi Rae Rae 10)

Raja 2014-05-10 Comments

Tamil Kamaveri – ஆதிராவின் பரம்பரையிலும் கூட அந்த மாதிரி சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறன.. ஐந்து தலைமுறைகளாக இதுவரை ஏழு பேர் என்ன ஆனார்கள் என்று தெரியாமலே காணாமல் போயிருக்கிறார்கள்.. தாமிரா இப்போது எட்டாவது ஆள்..!!

இவையெல்லாம் அல்லாமல் ஆதிராவின் கொள்ளுப்பாட்டி இன்னொரு கதை சொல்வாள்.. குறிஞ்சியிடம் போராடி தனது குழந்தையை மீட்டு வந்த கதை.. அதாவது பூவள்ளியின் அப்பா குழந்தையாக இருக்கையில்..!!

16

“வெள்ளன நாலு அஞ்சு மணி இருக்கும்.. நல்ல உறக்கம் எனக்கு.. திக்குன்னு நெஞ்சுக்குழி அடிச்ச மாதிரி இருந்துச்சு.. திடீர்னு முழிச்சு பாத்தா.. பக்கத்துல புள்ளைய காணோம்.. தூரத்துல குறிஞ்சி போயிட்டு இருந்தா..!!”

“எங்க இருந்துதான் எனக்கு அப்படி ஒரு துணிச்சல் வந்துச்சோ.. நாம செத்தாலும் பரவால, நம்ம புள்ளையை அவளுக்கு காவு குடுக்க கூடாதுன்னு நெனச்சேன்..!!”

“விடாம அவளை வெரட்டிக்கிட்டே போயி.. அவ வீடு வரை போயி மல்லு கட்டி.. புடிவாதமா என் புள்ளையை புடுங்கிட்டு வந்தேன்..!!

“நாம பயப்பட பயப்படத்தான்டி பேய்க்கு பலம்.. எதுத்து நின்னமுன்னா எந்த பேயா இருந்தாலும் பணிஞ்சுதான் ஆகணும்..!! அப்படி எதுத்து நின்னுதான் உன் தாத்தனை நான் மீட்டுக் கொண்டாந்தேன்..!! அதனால.. பயத்தை விடுங்க மொதல்ல.. பயந்தான் பேயை விட பெரிய சனியன்..!!”

தானும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. தைரியம் ஊட்டுகிற மாதிரி கொள்ளுப்பாட்டி சொன்ன கதை.. ஆதிராவுக்கு இப்போது நினைவுக்கு வந்தது..!!

கொள்ளுப்பாட்டியின் அந்த போதனைகள் எல்லாம் கடுகளவும் அப்போது ஆதிராவின் புத்தியில் ஏறவில்லை..!! அவளுக்கு ஏனோ துணிச்சல் என்பது.. ஆரம்பம் முதலே தூரத்து உறவாகவே இருந்தது..!! தூங்கும்போது கூட முகம் வரைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டே தூங்குவாள்..!! கையில் டார்ச்சுடன் அவளுடைய போர்வைக்குள் புகும் தாமிரா.. முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு.. அதை அக்காவுக்கு வெளிச்சமுமிட்டு காட்டியவாறு..

“பே…..!!!!!!!!!!!!!!!!!” என்று பெரிதாக கத்துவாள்.

“ஆஆஆஆஆஆ..!!” என்று பயத்தில் அலறி துடிப்பாள் ஆதிரா.

“பேயி.. பிசாசு..!!!” என்று தங்கையை வண்டை வண்டையாக திட்டுவாள்

“ஹாஹாஹாஹா..!!”

தாமிரா குலுங்கி குலுங்கி சிரிப்பாள்.. அக்காவை இந்த மாதிரி சீண்டுவதில் ஏனோ அவளுக்கு ஒரு அலாதி ப்ரியம்..!! பருவ வயது வந்த பிறகும் கூட.. பலமுறை அந்த மாதிரி பயந்தும் கூட.. அதே ட்ரிக்குக்கு திரும்ப திரும்ப அலறுவாள் ஆதிரா..!! அவ்வளவுதான் அவளுடைய துணிச்சலும் வீரமும்..!!

ஆனால்.. தாமிரா அப்படியல்ல.. இயல்பிலேயே மிக தைரியம் வாய்ந்தவளாக இருந்தாள்..!! அவளுடைய தைரியமும்.. அந்த தைரியம் தந்த துடுக்குத்தனமும்.. எல்லா சூட்சுமங்களை அறிந்து கொள்ள நினைக்கிற அவளுடைய ஆர்வமும்.. அந்த ஆர்வத்தினால் வீட்டிலுள்ள பொருட்கள் எதையாவது போட்டுடைப்பதும்..!!

“சர்க்கஸ்க்காரியா பொறக்க வேண்டியவ என் வயித்துல பொறந்து என்னை சாவடிக்கிறா..!!”

சிறுவயதில் தாமிராவை பூவள்ளி இந்தமாதிரித்தான் அவ்வப்போது கடிந்து கொள்வாள்..!! தாமிராவின் சுட்டித்தனமும் அவள் செய்கிற சேட்டைகளும்.. அடியையும் திட்டையுமே அவளுக்கு அடிக்கடி வாங்கித்தரும்..!! அமைதியும் அடக்கமும் ஒன்றாக உருவான ஆதிராவையே.. அனைவருக்கும் தாமிராவை விட அதிகமாக பிடித்து போகும்..!!

17

அடுத்தவர்கள் பார்வைக்கு தொல்லை தரும் பிள்ளையாக தாமிரா தோன்றியபோதும்.. ஆதிராவுக்கோ அவள் எப்போதுமே அன்புமிகு தங்கை.. சிறுவயதில் இருந்தே அவளுடன் அத்தனை ஒட்டுதல்.. அவளுக்கும் அக்கா மீது அத்தனை பாசம்..!! அவர்களுடைய பாசப்பிணைப்பை பற்றிய நினைவுகளே.. இப்போது ஆதிராவின் மனதில் அடிக்கடி ஓடிக்கொண்டிருந்தன..!! தங்கைக்காக ஏங்கினாள்.. அவள் காணாமல் போன உண்மையை தாங்க முடியாமல் தவித்தாள்..!!

தாமிராவை பற்றி நினைத்தாலே ஆதிராவுக்கு உடனடியாய் உள்ளத்தில் தோன்றுவது.. அவளுடைய கள்ளங்கபடம் இல்லாத வெள்ளை சிரிப்பும்.. கண்ணை சிமிட்டி அவள் பார்க்கிற குறும்பு பார்வையும்தான்..!! அப்புறம்.. அவளுடைய விளையாட்டுத்தனமும்.. அவள் ‘Game or Shame..??’ என்று கேட்கிற ஸ்டைலும்..!! இரண்டு கைகளையும் விரித்து முகத்துக்கு முன்பாக வைத்துக் கொள்வாள்.. ஒரு உள்ளங்கை அவள் பக்கமாக திரும்பியிருக்கும்.. இன்னொரு உள்ளங்கை எதிரிருப்பவரின் பக்கமாக திரும்பியிருக்கும்..!! இரண்டு கைகளுக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியில் ஒற்றைக்கண்ணால் பார்த்து.. அந்தக் கண்ணையும் வெடுக்கென வெட்டியவாறு கேட்பாள்..!!

“Game or Shame..??”

முதன்முறையாக அந்த மாதிரி அவள் கேட்டது கூட ஆதிராவுக்கு இப்போது நினைவிருக்கிறது.. அப்போது தாமிராவுக்கு எட்டுவயது.. ஆதிராவுக்கு பத்து வயது..!! இருவரும் அகழியில் உள்ள தங்கள் தாய்வழி தாத்தாவின் வீட்டில்.. பழைய பொருட்கள் அடைத்து வைத்திட்ட அறையில் விளையாடுகையில்.. ஒரு மரபொம்மையை கண்டெடுத்தனர்.. மாத்ரியோஷ்கா என்று அழைக்கப்படுகிற ரஷ்ய நாட்டில் தயாரான மரபொம்மை..!!

வித்தியாசமான பொம்மை அது.. பொம்மை என்று ஒருமையில் கூட சொல்ல இயலாது.. பொம்மைகள் என்று சொல்ல வேண்டும்.. ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த ஒரே மாதிரியான எட்டு பொம்மைகள்.. அளவில் மட்டும் ஒன்றோடொன்று மாறுபட்டிருக்கும்..!! பெரிய பொம்மையை திறந்தால் உள்ளே ஒரு சிறிய பொம்மை.. அந்த பொம்மையை திறந்தால், அதனுள்ளே அதைவிட சிறிய பொம்மை.. அந்த மாதிரி மொத்தம் எட்டு பொம்மைகள்..!!

அந்த பொம்மையை இருவருக்குமே பிடித்திருந்தது.. அதை யார் வைத்துக் கொள்வது என்று இருவருக்கும் சண்டை.. ‘நான்தான் முதலில் பார்த்தேன்.. நான்தான் முதலில் பார்த்தேன்..’ என்று இருவருமே வாக்குவாதம் செய்துகொண்டார்கள்..!! அப்போதுதான் தாமிரா திடீரென அவ்வாறு சொன்னாள்.. அவளுக்கே உரித்தான அந்த பிரத்தியேக பாணியுடன்.. கைகள் இரண்டையும் முகத்திற்கு முன்பாக உயர்த்தி பிடித்து..!!

“Game or Shame..??”

“Game or Shame-ஆ..?? அப்படினா..??”

“நான் ஒரு கேம் வைப்பேன்.. அதுல நீ ஜெயிச்சா.. இந்த பொம்மையை நீயே வச்சுக்கோ.. தோத்துட்டா நான் வச்சுப்பேன்..!!”

“கேம் சரி.. அதென்ன ஷேம்..??”

“கேம் வெளையாட நீ வரலனா.. ‘பயந்தாங்கொள்ளி பயந்தாங்கொள்ளி’ன்னு நான் உன்னை கேலி பண்ணுவேன்.. அது உனக்கு ஷேம்..!! ஹாஹாஹாஹா..!!” சொல்லிவிட்டு தாமிரா கலகலவென சிரித்தாள். அப்புறம் அந்த சிரிப்புடனே அக்காவை பார்த்து,

“இப்போ சொல்லு.. Game or Shame..??” என்று கேட்டாள்.

“Game..!!” ஆதிராவும் வீராப்பாக சொன்னாள்.

கேம் என்ன என்பதை அடுத்த நாள் சொல்வதாக தாமிரா சொன்னாள்.. அன்று அந்த பொம்மையை எடுத்த இடத்திலேயே திரும்ப வைத்துவிட்டார்கள்..!! அடுத்த நாள்.. அதுபற்றிய நினைவே இல்லாமல் ஆதிரா இருந்த சமயத்தில்.. தாமிரா அவள் முன்பு திடீரென தோன்றி கத்தினாள்..!!

“Game or Shame..??”

“Game..!!” ஆதிராவும் பதிலுக்கு கத்தினாள்.

18

“தலை போனா மறைக்கும்.. இடை போனா குறைக்கும்.. கால் போனா குதிக்கும்..!!”

“என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!”

“தலை போனா மறைக்கும்.. இடை போனா குறைக்கும்.. கால் போனா குதிக்கும்..!!”

ஆதிராவின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. தாமிரா திரும்ப திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவுக்கு சில வினாடிகள் எதுவும் புரியவில்லை.. அதன் பிறகு அவளுடைய மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்ட.. முகத்தில் ஒரு மலர்ச்சியுடன் வீட்டுக்குள் ஓடினாள்..!! தாமிராவும் தமக்கையை பின்தொடர்ந் து ஓடினாள்..!!

அந்த நீண்ட வராண்டாவை ஆதிரா சிட்டாக கடந்தாள்.. அகலமான ஒரு மரத்தூணை சரக்கென சுற்றி திரும்பினாள்.. விரிந்திருந்த முற்றத்தை தாண்டி பாய்ந்தாள்.. வீட்டின் பின்வாசலை ஒட்டியிருந்த அறைக்குள் புயலென புகுந்தாள்..!! அவளுக்கு பின்னே ஓடிவந்திருந்த தாமிராவும் வாசலில் வந்து நின்றாள்..!!

அறைக்குள் அந்த மரக்குதிரை நின்றிருந்தது.. ஆதிராவும் தாமிராவும் வழக்கமாக ஏறி விளையாடுகிற குதிரை.. ஓடாமல் நகராமல் ஒரே இடத்தில் அவர்கள் சவாரி செய்கிற குதிரை..!! அந்த குதிரையை நெருங்கிய ஆதிரா.. அதன் வயிற்றுப் பகுதியில் இருந்த திறவை பிடித்து வெளியிழுத்தாள்..!! உள்ளே அந்த மரபொம்மை காட்சியளித்தது..!!!!

முகத்தில் ஒரு மலர்ச்சியுடன், ஆதிரா திரும்பி தங்கையை பார்த்தாள்.. அவளுடைய முகத்திலும் ஒரு பிரகாசம்.. புன்னகைத்தாள்..!! பொம்மையை வெளியே எடுத்தாள் ஆதிரா.. எடை குறைவாக இருப்பது தெளிவாக தெரிந்தது..!! பொம்மையின் உடலை பற்றி திருக.. அது படக்கென திறந்து கொண்டது..!! உள்ளே மற்ற பொம்மைகளை காணோம்.. ஒரே ஒரு துண்டு சீட்டு..!! சீட்டை பிரித்து படித்தாள்..!!

“நாலு மூலை நாடக சாலை..
நடுவிலிருக்கும் பாடகசாலை..!!
ஆடும் பெண்கள் பதினாறு..
ஆட்டி வைப்பவர் ரெண்டு பேரு..!!”

படித்து முடித்தவள் தங்கையை நிமிர்ந்து பார்க்க.. அவள் கன்னத்தில் குழிவிழ அழகாக சிரித்தாள்..!! அப்படி சிரித்தவாறே..

Comments

Scroll To Top